சித்தியடைந்த பகவானும், முக்தியடைய நினைக்கும் பக்தர்களும்.


மரணமடைந்த சாய்பாபா உடல்நலம் குன்றி இருந்தபோது சாய்பாபா தனது 95-ஆம் வயதில்தான் ஜீவசமாதி அடைவார்.அதுவரை ஜீவித்திருப்பார் என்றெல்லாம் உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பினார்கள். ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டு சாய்பாபா தனது 86-வது வயதில் இறந்து விட்டார்.



வெளிநாட்டிலோ...வெளியூரிலோ ஒருவருக்கு உடல்நிலை சரியாக இல்லை  என்றால் அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை காணிக்கையாக கறந்து விட்டு சாய்பாபாவால் விபூதி அனுப்பப்படும். அதை சாப்பிட்ட பக்தர்களின் வியாதி குணமானதோ என்னவோ ஆனால் பாபாவின் கல்லா நிரம்பியது. ஆனால், அவருக்கு சுகவீனம் என்றதும் அதே விபூதியை உட்கொள்ளாமல்....பக்தர்களின் காசில் கட்டப்பட்ட சாய் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். பக்தர்களின் வியாதியை குணமாக்கிய விபூதி இவரின் வியாதியை குணமாக்காமல் போனதுதான் வேதனை.


அப்பாவி பக்தர்களை ஏமாற்ற நிஜ கடவுள்,  நேரடியாக அவதாரமெல்லாம் எடுத்துவர தேவையில்லை..அதற்கு அவசியமுமில்லை.
ஒரு துவைக்காத காவி வேட்டி, பலநாட்கள் குளிக்காத அழுக்கு தேகம், வருடக்கணக்கில் வெட்டாத குருவிக்கூடு கேசம்(அப்போதுதான் அந்த முடியில் மோதிரம்,வாட்ச் போன்ற பொருட்களை ஒளித்து வைத்திருந்து யாரும் பார்க்காத நேரத்தில் எடுக்கலாம்), அழுக்கடைந்திருக்கும்  நகங்கள், கொஞ்சம் மேஜிக், கொஞ்சம் சித்து விளையாட்டு தெரிந்தால் போதும். ஏதாவது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு அருள்வாக்கு சொல்கிறேன் பேர்வழி என்று சொன்னால் போதும்....மூட ஜனங்களிடமிருந்து பணம் கொட்டோகொட்டென்று கொட்டும்...


அதற்கு காரணம் போலி சாமியர்களல்ல....மக்கள்தான்...அவர்களுக்கு கடவுள் மேல் இருக்கும் பயமும், வாழ்க்கை மேல் இருக்கும் பயமும் தான் காரணம்....இருக்கும்போது நன்றாக வாழவேண்டும், இறந்த பின்னும் மோட்சம் அடைய வேண்டும்...அதற்கு கடவுளை அடைய வேண்டும், காணிக்கைகள் மூலம் கடவுளை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைக்கும் மக்கள் அதற்காக நாடுவது கடவுளையோ...கோவிலையோ அல்ல...மாறாக, போலிசாமியார்களை....



கடவுளின் அவதாரமாக நினைத்து இவர்களை வழிபட  ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் அறியாமையை இவர்களும் பயன் படுத்தி கொள்கிறார்கள்.

சரி...இப்போது சாய்பாபா விஷயத்திற்கு வருவோம்....
தனது 95-வயதில் இறப்பேன் என்று சொன்ன பாபா தன 86-வது வயதிலேயே அவசர அவசரமாக புறப்பட வேண்டிய அவசியமென்ன?
இன்னும் பத்து வருடம் கழித்து வருகிறேன் என்று எமனிடம் மன்றாடி இருக்கலாமே? கடவுள் சொன்னால் எமன் கேட்காமல் போய் விடுவானா என்ன?


அதிலும்  ஒரு பக்தர் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பேசியிருக்கிறார்...என்னவென்றால்.....
"நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது" என்று கூறி புல்லரிக்க  வைத்துள்ளார்....எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க....


ஒருவேளை பாபா இறக்காமல்  95-வயது வரை உயிரோடு இருந்திருந்தால் என்ன சொல்வார்கள்..இதே கணக்கைத்தான் சொல்வார்களா என்று பார்த்தால் வேறு ஒரு காரணத்தை சொல்லி சப்பை கட்டு கட்டுவார்கள். என்ன செய்வது அவர்கள் அப்படித்தான் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்....தற்கொலை செய்வதை தவிர்த்து மரணம் என்பது யாரும் தீர்மானிக்க முடியாது...அது இயற்கையின் நியதி....இத்தனை வருடம் இந்த பூமியில் வாழ்வேன் என்றெல்லாம் கணிக்க முடியாத விஷயம்.

இவ்வளவு நாள்தான் வாழ்வேன்...இத்தனை வயது வரை வாழ்வேன் என்றுஒருவர் கூறுகிறாரேயானால் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர் குறித்திருக்கும் மரண தேதிக்கு முன் அவர் இறந்து விட்டால் பிரச்சினையில்லை. ஆனால்,  சரியாக முன்பே குறிப்பிட்ட தேதியில் இறந்து விட்டால் புகழை தக்கவைக்க குறித்த தேதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றே அர்த்தம். தூக்க மாத்திரை அல்ல்லது விஷம் போன்ற எதாவது ஒன்றை சாப்பிட்டு மரணத்தை தழுவி இருக்கலாம். (இது தெரியாமல் மக்கள் அவரை அவதார புருஷனாக கொண்டாடுகிறார்கள்). அப்படி இறந்தவரின் உடலை பிரேத  பரிசோதனைக்கு உட்படுத்தினால் மர்மம் விளங்கும்.

இறுதியாக சாய்பாபா பக்த கோடிகளுக்கு......



கவலையை விடுங்கள் பக்தர்களே....ஷீரடி சாய்பாபா இறந்தபோது அவரின் மறுபிறவியாக எப்படி புட்டபர்த்தி சாய்பாபா வந்தாரோ...அதே போல...இவருக்கு பதிலாக  உங்களை ஏமாற்ற வேறொரு இடத்தில் வேறொரு பாபா பிறந்திருப்பார்......கூடிய விரைவில் உங்கள் முன் வருவார்...அப்போது அவருக்கும் கோவில்கட்ட தயாராக இருங்கள். அவர் வரும்வரை காத்திருங்கள்.








6 நண்பர்கள்

சித்தியடைந்த பகவானும், முக்தியடைய நினைக்கும் பக்தர்களும்.

என்ற இந்த பதிவிற்கு கருத்து சொல்லியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி

  1. முதல் வருகை

    அவதாரங்கள் மக்களால் உறுவாக்கப்படுவார்கள்..
    சரியாக சொன்னீர்கள்..

    Unknown கருத்து இது :

    //கூடிய விரைவில் உங்கள் முன் வருவார்...அப்போது அவருக்கும் கோவில்கட்ட தயாராக இருங்கள்//
    அதுவும் ஏற்கெனவே சொல்லி இருக்கிறாங்களே பாஸ்! :-)

    இராஜராஜேஸ்வரி கருத்து இது :

    காரணம் போலி சாமியர்களல்ல....மக்கள்தான்...அவர்களுக்கு கடவுள் மேல் இருக்கும் பயமும், வாழ்க்கை மேல் இருக்கும் பயமும் தான் காரணம்//
    ஏற்கக்கூடிய கருத்து.

    அஞ்சா சிங்கம் கருத்து இது :

    இதை எல்லாம் பார்த்து இந்நேரம் ஒருவர் தயார் ஆகி கொண்டிருப்பார் . பயிற்சி எல்லாம் முடிந்த பின் வெளியே வருவார் நான் தான் புட்ட பர்த்தியின் மறு அவதாரன் என்று .

    A.R.ராஜகோபாலன் கருத்து இது :

    மூடநம்பிக்கைகளை
    முடக்கி போடும்
    முத்தான பதிவு
    நண்பரே வாழ்த்துக்கள்

Powered by Blogger